وَلَكُمْ مَا كَسَبْتُمْ
நீங்கள் தேடிக்கொண்டதே உங்களுக்கு (கிடைக்கும்). திருக்குர்ஆன்:- 2:141
வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பெரியோர்களின் அனுபவமொழி இது.
ஒருவர் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அது போன்றுதான் நாம் எதைத் செய்கிறோமோ அதுதான் நமக்குத் திரும்ப வரும். நல்லதை செய்தால் நல்லது வரும். தீமையை செய்தால் தீமை வரும். இது தான் உலகநியதி. வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம். ஆனால், நிச்சயம் வரும்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلاَّ قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ ) ஓர் இளைஞர் ஒரு முதியவரை அவரது வயதுக்காகக் கண்ணியப்படுத்தினால், அந்த இளைஞரின் முதுமையில் அவரைக் கண்ணியப்படுத்துகின்ற ஒருவரை அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1945
பழைய செய்தி – புதிய செய்தி
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? திருக்குர்ஆன்:- 6:6
(நபியே!) நீர் கூறுவீராக. நிலத்தில் பயணம் செய்யுங்கள். பின்னர் பொய்யர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதைக் கவனியுங்கள். திருக்குர்ஆன்:- 6:11
பழைய செய்தி: இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை பாதிப்படைந்த ஃபலஸ்தீனத்தை மீண்டும் கட்டியெழுப்ப 35 பில்லியன் (3,500 கோடி) அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் உதவியின்றி இஸ்ரேல் போராட முடியாது. ஃபலஸ்தீனர்களை குண்டு வீசி தாக்குவதில் இஸ்ரேலுடன் “வட கரோலினா, புளோரிடா” ஆகிய அமெரிக்காவின் இரு மாகாணங்கள் துணை நிற்கின்றன.
வட கரோலினா என்பது அமெரிக்காவின் இராணுவ மையமாகும். மேலும், அதனுடைய மக்கள் பெரும்பாலோர் இராணுவ உபகரணங்களை தயாரிப்பதில் அல்லது இராணுவ தளங்களை இயக்குவதில் ஈடுபட்டுள்ளனர். இங்கே, அமெரிக்காவின் பெரிய இராணுவத் தளங்கள் உள்ளன. இங்கிருந்து குண்டுகளை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானங்கள் புறப்பட்டு சென்று, இஸ்ரேலுக்கு குண்டுகளை வழங்குகின்றன. அவற்றை இஸ்ரேல் ஃபலஸ்தீனியர்கள் மீது வீசுகின்றது. இங்கிருந்து இஸ்ரேலுக்கு ஆயுதமேந்தி விமானங்கள் புறப்படும் போது, “ஃபலஸ்தீனியர்களைக் கொல்லுங்கள்” என்று ஆரவாரம் செய்யுமளவிற்கு இங்குள்ள மக்கள் இஸ்ரேலின் பலமான ஆதரவாளர்கள் ஆவர்.
புளோரிடாவில், அமெரிக்காவின் பணக்கார யூதர்கள் வாழ்கின்றனர். இவர்கள்தான் அமெரிக்க ஆட்சியில் செல்வாக்கு செலுத்தும் யூதர்கள். இவர்கள் இஸ்ரேலுக்கு உதவிகளை அனுப்புகின்றனர். பின்னர் அவை வட கரோலினாவுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவை விமானங்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன.
வட கரோலினா இராணுவ சக்தியைக் குறிக்கிறது. புளோரிடா நிதி மற்றும் அரசியல் சக்தியைக் குறிக்கிறது.
இந்நிலையில் செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு அல்லாஹ் கடலிலிருந்து ஒரு பெரிய புயலை எழுப்பினான். அதற்கு மேற்கத்தியர்கள் “ஹெலினா” என்று பெயரிட்டனர். இந்த புயல் கடலிலிருந்து எழுந்து மற்ற மாகாணங்களை கடந்து வந்து வட கரோலினாவில் நேராக வெடிகுண்டுகளை வீசும் ஒரு பெரிய குண்டு வீச்சாளர் போல நேரடியாகத் தாக்கி, சூறைக்காற்றாலும், பலத்த மழை வெள்ளத்தாலும் துவசம் செய்துவிட்டது.
இதனால், அங்கு வசித்து வந்த பத்து மில்லியன் (1 கோடி) மக்கள் தொகையினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கணிசமான பகுதியினர் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களுக்கு குடிநீர் இல்லை; உடைகள் இல்லை; உணவு இல்லை; தங்குமிடம் இல்லை; அவர்கள் திறந்த வானத்தின் கீழ் கிடக்கின்றனர்.
அமெரிக்க அரசாங்கம் வட கரோலினாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 35 பில்லியன் (3,500 கோடி) அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறது.
இப்போது புளோரிடாவை கவனிப்போம். மெக்சிகோ வளைகுடாவிலிருந்து எழும் மற்றொரு புயல் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை ஏற்றிய பெரிய குண்டுவீச்சைப் போல புளோரிடாவை நோக்கிச் சென்றது. இந்நிலையில் மணிக்கு 180 மைல் வேகத்தில் வீசிய காற்று, மனிதகுலம் இதுவரை கண்டிராத காற்று. கடலில் சுழன்று புளோரிடாவை நோக்கி நகர்ந்தது. புளோரிடா மாநிலம் முழுவதும் இந்த அச்சுறுதலுக்கு உள்ளாக்கியது. புளோரிடாவில் 22 மில்லியன் (2 கோடி 20 இலட்சம்) மக்கள் உள்ளனர். அதில் ஒரு சில மில்லியன் மக்கள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ளவர்கள் வீடற்றவர்களாக ஆகிவிட்டனர். இந்த புயல் கடுமையாக இருப்பதால் மாநிலம் முழுவதுமுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். புளோரிடாவை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்காவிற்கு 200 பில்லியன் (20 ஆயிரம் கோடி) அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்தி: எழுத்தாளர் நூருத்தீன் (12-01-2025) சியாட்டில் இருந்து…. தற்போது அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றி இருக்கின்றது. 11 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் கோரத் தீயின் இப்போதைய பாதிப்பு நிலவரம் இது.
ஸான் ஃபெனாண்டோ (San Fernando) நகருக்கு வடக்கே பரவியுள்ள ஹர்ஸ்ட் தீ (Hurst Fire) 771 ஏக்கரை அழித்துள்ளது. அதற்கு வட கிழக்கே ஆக்டான் (Acton) பகுதியில் 394 ஏக்கரையும் கலபாசஸ் (Calabasas) பகுதியில் தொடங்கியுள்ள தீ மூன்று மணி நேரத்தில் 960 ஏக்கரையும் பாசடீனா (Pasadena) அருகே, நகரின் கிழக்குப் பகுதியில் பரவியுள்ள தீ 13,690 ஏக்கரையும் எரித்துள்ளது. ஆகப் பெரிய அழிவு பாலிசேட்ஸ் தீ (Palisades). பசிபிக் பாலிசேட்ஸ் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ள இந்தத் தீயின் கோரத்தாண்டவத்தில் எரிந்த நிலம் 19,978 ஏக்கர்.
பசிபிக் பாலிசேட்ஸ் அழகான மலைப்பகுதிகள், கட்டடங்கள், தோட்டங்கள் கொண்ட பிரமாதமான கிராமம். புகழ்பெற்ற பிரபலங்களின் வீடுகள் அங்கு உள்ளன. ம்ஹும்! இருந்தன. மின்னல் வேகத்தில் பரவிய தீயில் அனைத்தும் முற்றிலுமாக அழிந்து சுடுகாடாக மாறி, சாம்பல் மேடுகள் குவிந்து, வெண்புகை மட்டும் வானில். இங்கு 5,300 கட்டடங்கள் அழிவுக்கு உள்ளாகியுள்ளன என்று இதுவரை கணக்கிட்டிருக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள், ‘வறண்டிருந்த பூமி, ஒரே பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தீ, 100 மைல் வேகத்துடன் வீசிய சூறாவளிக் காற்று, அதன் விளைவாக ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு விமானங்களைப் பயன்படுத்த இயலாத நிலை; காற்றின் உதவியால் மின்னல் வேகத்தில் பரவிய தீ, ஆகியவை இந்தப் பேரழிவை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டன,’ என்கின்றனர்.
அது மட்டுமின்றி, “இவ்வகையான பிரம்மாண்ட தீ விபத்தை எதிர்கொள்ளும் நீர் அமைப்பு உலகத்தில் எங்குமே இல்லை என நான் நினைக்கிறேன்,” என்று UCLAவின் நீர் வள நிபுணர் கிரெக் பியர்ஸ் (Greg Pierce) கூறியுள்ளார்.
தீ பரவ ஆரம்பித்த சில நிமிடங்களில் தப்பி ஓடிய மக்கள், சாம்பலாகிவிட்ட தங்களது வீடுகளையும் உடைமைகளையும் செய்தி ஒளிக்காட்சியில் பார்த்து வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த எந்த இயற்கைச் சீற்றத்தையும்விட மிகப்பெரியது. அமெரிக்காவில் இதுவரை நிகழ்ந்த தீ விபத்துகளிலேயே மிக மோசமான ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, “இந்த தீவிபத்துகள் அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை,” என்று UCLA பருவநிலை விஞ்ஞானி டேனியல் ஸ்வெய்ன் கூறியுள்ளார்.
“இது முற்றிலும் முன்மாதிரியற்ற தீ விபத்து” என்று மேயர் கேரன் பாஸ் (Karen Bass) தெரிவித்துள்ளார்.
ஃபலஸ்தீன கஸ்ஸாவை அமெரிக்க ஏவுகணைகளால் தீயிட்டு அழித்துக்கொண்டிருக்கும் சமகால அராஜகத்தை, முழு வளைகுடா நாடுகளுக்கும் நடக்கும் என்பதாக, ஆணவத்தின் உச்சத்தில் “All hell will break out in the Middle East” என்று தீ பரவலுக்கு இரு நாள்கள் முன், அமெரிக்க அதிபர் “ட்ரம்ப்” கர்ஜித்தார்! All hell will break out என்பது வேறொருவன் தீர்மானிப்பது என்பதை இப்போது உணர்ந்திருப்பார்.
(அதாவது, அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், “நான் ஓயிட் ஹவுஸ் வருவதற்கு முன்பு பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை என்றால், மத்திய கிழக்கை நரகமாக்குவேன்” என்று சொன்னார். ஆனால்,) அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இறைவனின் நரகம் எப்படி இருக்கும் என்று ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா ஒரு சாம்பிள் காட்டித் தந்துள்ளான்.
காஸாவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் 80 ஆயிரம் டன் குண்டுகளை போட்டு ஒரு வருடமாக செய்த அழிவைவிட பல ஆயிரம் மடங்கு அதிக அழிவுகள் ஓரிரு நாள்களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ளது.
463 நாட்கள் நடந்த யுத்தத்தில் காஸாவை நாசமாக்க இதுவரை அமெரிக்கா 2000 கோடி டாலர் தந்துள்ளது. ஆனால், ஏழு எட்டு நாள்கள் காட்டுத்தீ பிடித்து எறிந்தது. அதனால் ஏற்பட்ட இழப்புத் தொகை 25000 கோடி டாலர் வரும் என்று கணக்குகள் சொல்கிறது.

விவசாயி கற்றுத்தந்த பாடம்
ஒருவிவசாயி தமது தோட்டத்தில் விளைந்த முருங்கை காய்களை பறித்து, வாரம் ஒருமுறை பக்கத்து ஊரிலுள்ள ஒரு மளிகை கடையில் ரெகுலராக விற்றுவிட்டு வருவது வழக்கம். முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிவருவார்.
அந்த விவசாயி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம். இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல இலாபம் சம்பாதித்துவிடுவார்.
பல வருடமாக அந்த விவசாயி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை. விவசாயி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருள்களை கொடுத்து அனுப்புவார். காரணம் விவசாயியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது.
ஒருநாள் விவசாயி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருள்களை வாங்கிச்சென்றார். சிறிது நேரத்தில், பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட்டார். அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.
அன்று முழுவதும் மளிகைக்காரருக்கு தூக்கமே வரவில்லை! விவசாயிமீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே! இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்துவிட்டோமே! அடுத்தமுறை விவசாயி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார். நான்கு நாள்கள் கழித்து விவசாயி மிகவும் சந்தோஷமாக வந்தார். நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்.
மளிகைக்காரர், கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்றெண்ணி, “எத்தனை கிலோ?” என்று கேட்டார். மளிகைக்காரர், “ஒருகட்டு பத்து கிலோ” என்றார். அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்த்தபோது, ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது.
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என்று விவசாயின் கன்னத்தில் அறைந்தார். “இத்தனை வருடமாக இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் செய்துவிட்டாயே! சீய்…” என்று துப்ப, விவசாயி நிலைகுலைந்து போனார்.
விவசாயி, அய்யா! என்ன மன்னிச்சிடுங்க! நான் ரொம்ப ஏழை, எடைக்கல் வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன். இதைத் தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா” என்று கூறி அழலானார்.
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக விவசாயியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும், அவருக்கே தெரியாமல் ஏமாந்துகொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது.
நரக தண்டனைக்கு
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), ( أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ) “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், ( الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ ) “யாரிடம் வெள்ளிக்காசோ, பொருள்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.
நபியவர்கள், ( إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ ) “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமைநாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5037
பிறர் பொருளை அபகரித்தல், அப்பாவியான மனிதர்களை ஏசி பேசி மனதை நோகடித்தல், பிறரை அடித்துத் துன்புறுத்துதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல் போன்ற வினைகளை புரிந்தவனுக்கு, அதன் எதிர்வினையே அவன் அனுபவிக்கும் நரக தண்டனை.
சுருங்கக் கூறின், மறுமைநாளில் ஒரு மனிதனுக்கு கிடைக்கவிருக்கும் நரக தண்டனைக்கு, அவன் செய்த வினையே காரணமாகும்.
கொழுந்துவிட்டெரியும் நெருப்பு
அதில் (நரகில்) அவர்கள் தள்ளப்பட்டு, “எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்” (என்று கூறப்படும்). திருக்குர்ஆன்:- 22:22
நெருப்பானது கட்டுப்பாடற்று எரியும்போது பொருள் சார்ந்த அழிவுகளையும், தாவரங்கள், விலங்குகள், மனிதருக்கு ஆபத்தையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், எங்களை ஒரு குழுவில் அனுப்பிவைத்தார்கள். அப்போது, ( إِنْ وَجَدْتُمْ فُلاَنًا وَفُلاَنًا فَأَحْرِقُوهُمَا بِالنَّارِ ) ‘‘இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விருவரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் புறப்பட தயாரானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நபியவர்கள், ( إِنِّي أَمَرْتُكُمْ أَنْ تُحْرِقُوا فُلاَنًا وَفُلاَنًا، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللَّهُ، فَإِنْ وَجَدْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا ) ‘‘இன்னாரையும் இன்னாரையும் எரித்துவிடுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பால் (உயிர்களை) வேதனை செய்யக்கூடாது. ஆகவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3016
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முன்னர் வாழ்ந்த) இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்திற்குக் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மரத்திற்குக் கீழேயிருந்து தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்டதும் அந்த எறும்புப் புற்றை எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ் ( أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ اللَّهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً ) ‘‘ஓர் எறும்பு உம்மைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீர் எரித்துவிட்டீரே! (அந்த) ஒரே ஓர் எறும்பை (மட்டும்) நீர் தண்டித்திருக்கக் கூடாதா?” என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். அறிவிப்பாளர்:-அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3019, முஸ்லிம்-4512
அந்த நபியின் மார்க்கத்தில் எறும்பை கொல்வதும் அதை நெருப்பால் எரிப்பதும்கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம். எனவேதான், கடித்த ஓர் எறும்புக்குப் பதிலாக எறும்புப் புற்றில் இருந்த அனைத்து எறும்புகளையும் எரித்ததை அல்லாஹ் கண்டித்தான். ஆனால், நமது மார்க்கத்தில் எந்த உயிரினத்தையும் நெருப்பால் எரிப்பது தடை செய்யப்பட்டதாகும். நூல்:- அல்மின்ஹாஜ்
அமெரிக்க நாட்டில் காட்டுத்தீ என்பது ஆண்டுதோறும் ஏற்படும். ஆனால், வரலாறு காணாத பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ள இப்போது ஏற்பட்டுள்ள தீயின் கோரத்தாண்டவம் அல்லாஹ்வின் தண்டனையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அல்லாஹுத்தஆலா தவறிழைப்போரை தண்டிப்பதற்கென்றே நரகத்தைப் படைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது. அல்லாஹுத்தஆலா அதை இங்கிருந்தே இப்போதே தொடங்கிவிட்டானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட முறையில் தீ கொழுந்துவிட்டு எரிந்து, பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளதே, இதை வேறு எவ்வாறு எண்ணுவது?
மனிதன் பிறரை தீயால் தண்டிக்கக்கூடாது; மாறாக, படைப்பாளனாகிய அல்லாஹுத்தஆலா யாரையும் எப்படியும் தண்டிக்கலாம்; அவன் தமது கட்டளைக்கு மாறுசெய்வோரை அணைக்க முடியாத கொழுந்து விட்டெரியும் நெருப்பாலும் தண்டிப்பான் என்கிறது இஸ்லாம்.
அமெரிக்காவில் தீப்பற்றி எரிகிறது என்பதற்காக நாம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. இனியாவது, அநியாயக்காரர்கள் திருந்த வேண்டுமே என்றுதான் எண்ணுகிறோம்.
அழிவு, பசி, அழுகை, கூக்குரல், வலி, பிரிவு, பாசம், தனிமை, தவிப்பு இதுவெல்லாம் மற்றவர்களுக்கு வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதை இனியாவது புரிந்துகொள்ள வேண்டுமே என்றுதான் எண்ணுகிறோம்.
அமெரிக்காவில், கடுமையான காட்டுத்தீயால் பாதிப்பு அடைந்த லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் முஸ்லிம்கள் உதவி புரிந்த காட்சியைக் கண்டோம். பிறர் நலம் நாடுதலே இஸ்லாம்.
உண்மையான முஸ்லிம், பேரிடரில் சிக்கிக்கொண்டவர்கள் எதிரிகளாகவே இருந்தாலும்கூட, அவர்களுக்கு உதவி செய்ய எண்ணுவானே தவிர, அதை எண்ணி மகிழ்ச்சிக்கொள்ள மாட்டான். இஸ்லாம், இவ்வாறு தான் முஸ்லிம் சமூகத்தை கட்டமைத்துள்ளது.
பாதுகாப்புப் பெற
தல்க் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அபூதர்தா (ரலி) அவர்களிடம், ( قَدِ احْتَرَقَ بَيْتُكَ ) “உங்கள் வீடு எரிந்துவிட்டது” என்று சொல்லப்பட்டது. அதற்கு அன்னார் ( مَا كَانَ اللَّهُ لِيَفْعَلَ ذَلِكَ ) “அல்லாஹ் அவ்வாறு செய்திருக்கமாட்டான்” என்று கூறினார்கள். அன்னாரிடம் இவ்வாறே மூன்று முறை கூறப்பட்டபோது, அன்னாரும் அதற்கு இவ்வாறு தான் பதிலளித்தார்கள். பிறகு ஒரு மனிதர் வந்து, ( يَا أَبَا الدَّرْدَاءِ إِنَّ النَّارَ حِينَ دَنَتْ مِنْ دَارِكَ طُفِئْتْ ) “அபூதர்தா (ரலி) அவர்களே! நெருப்பு உங்கள் வீட்டை நெருங்கும்போது அணைந்துவிட்டது” என்று கூறினார். அதற்கு அன்னார், ( قَدْ عَلِمْتُ ذَلِكَ ) “அது எனக்குத் தெரியும்” என்று கூறினார்கள்.
பிறகு அன்னாரிடம் ( مَا نَدْرِي أَيَّ قَوْلَيْكِ أَعْجَبَ ) “உங்களின் இரண்டு வார்த்தைகளில் எதைக் கொண்டு ஆச்சரியப்படுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. (அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொன்னீர்கள்) என்று கேட்கப்பட்டது. பிறகு அன்னார், அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்ல நான் கேட்டுள்ளேன்.
( مَنْ قَالَهُنَّ أَوَّلَ نَهَارِهِ؛ لَمْ تُصِبْهُ مُصِيبَةٌ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهَا آخِرَ النَّهَارِ لَمْ تُصِبْهُ مُصِيبَةٌ حَتَّى يُصْبِحَ: “اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، عَلَيْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، مَا شَاءَ اللهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ” )
“இறைவா! நீயே என் இறைவன். வணங்கப்படுவதற்கு உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. உன் மீதே நான் பொறுப்பு சாட்டுகிறேன். நீயே கண்ணியத்திற்குரிய அரியணையின் இறைவன் ஆவாய். அல்லாஹ் நாடியது மட்டுமே நடைபெறும்; அவன் நாடாதது நடைபெறாது. மகத்துவமிக்கோனும் உயர்ந்தோனும் ஆகிய அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ, நன்மை செய்யும் ஆற்றல் பெறவோ (எவராலும்) முடியாது. நிச்சயமாக அல்லாஹ் அனைத்து வஸ்துகள் மீதும் ஆற்றல் பெற்றவன். மேலும் நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவு அனைத்து வஸ்துக்கள் மீதும் சூழ்ந்திருக்கிறது என்பதை நான் அறிவேன். இறைவா! என் மனதின் தீங்கிலிருந்தும், மற்ற படைப்புக்களின் தீங்கிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக! நீ தான் அவற்றின் பிடிமானத்தை வைத்திருக்கிறாய். என் இறைவன் நேரான வழிகாட்டக்கூடியவன் ஆவான்.”
என்பதை யார் பகலின் ஆரம்பத்தில் இதை ஓதுகின்றாரோ மாலையாகும் வரை அவருக்கு எந்த சோதனையும் ஏற்படாது. யார் பகலின் இறுதியில் இதை ஓதுகின்றாரோ மறுநாள் காலை வரை அவருக்கு எந்த சோதனையும் ஏற்படாது. (இதை நான் தினந்தோறும் காலை மாலை நேரங்களில் ஓதி வருகிறேன். எனவேதான், நான் அவ்வாறு கூறினேன்) நூல்:- அல்இலலுல் முத்தனாஹியா இப்னு ஜவ்ஸீ ( الْعِلَلُ الْمُتَنَاهِيَةُ ), தக்ரீஜுல் இஹ்யா இமாம் அல்இராக்கீ ( تَخْرِيجُ الْإِحْيَاءِ )
நம்மையும் நமது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள இஸ்லாம் கற்றுத்தந்துள்ள இதுபோன்ற பிரார்த்தனைகளை அனுதினமும் ஓதி வர வேண்டும்.
உலகில் நிகழும் பேரிடரில் சிக்கிச் சிரமப்படும் நல்லோர்களுக்கு, அல்லாஹுத்தஆலா அழகிய பொறுமையையும், பன்மடங்கு பகரத்தையும் வழங்குவானாக! ஆமீன்!