கவலை மற்றும் மன அழுத்தம் நீங்க இஸ்லாம் கூறும் வழிமுறை
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே !
இவ்வுலக வாழ்க்கையில் நாம் பிறக்கும் பொழுதே நம்முடன் ஒட்டிப்பிறந்த ஒன்றுதான் கவலைகளும் சஞ்சலங்களும் அச்சங்களும். சில நேரங்களில் நாம் சந்தோஷமாக இருக்கும்பொழுது திடீரென நமக்கு எப்படித்தான் அந்த கவலை வருகிறதோ?!
காலையில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் மாலையில் கவலையாக இருப்பதை நாம் பார்க்கிறோம். மாலையில் மகிழ்ச்சியாக இருப்பவர்களை காலையில் கவலையுடன் இருப்பதை காண்கிறோம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலாவின் சோதனைகளில் ஒன்று இந்த கவலை துக்கம் மன சஞ்சலம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா மகிழ்ச்சியை கொடுத்தும் ஒரு அடியானை சோதிப்பான்; கவலையை கொடுத்தும் ஒரு அடியானை சோதிப்பான்.
அல்லாஹ் கூறுகிறான்;
وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ
நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 21 : 35)
நமது மனதுக்கு கவலைத் தரக்கூடிய ஒரு நிகழ்வு நடந்தாலும் அதுவும் ஒரு சோதனை. நமது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வு நடந்தாலும் அதுவும் ஒரு சோதனை.
நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றால் ஒரு கவலையோ துக்கமோ நடந்தால் மட்டுமே அதை அல்லாஹ் நமக்களித்த சோதனையாக பார்க்கிறோம். மாறாக செல்வமோ வசதி வாய்ப்புகளோ மகிழ்ச்சியான வாழ்க்கையோ அதை நமக்கு அல்லாஹ் அளித்த நிஃமத்துகளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். அதை நாம் சோதனையாக என்றுமே நினைப்பதில்லை!
மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி கொண்டிருக்கும் நிலையில் செல்வமோ வசதி வாய்ப்புகளோ அவனுக்கு அமையப் பெற்றிருந்தால் அது அல்லாஹ்வுடைய அருட்கொடையாகவும் பரக்கத்தாகவும் இருக்கும்.
இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்; அதாவது அவ்வாறு அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அருட்கொடையாக செல்வம் ,வசதி வாய்ப்பு ,நல்ல வாழ்க்கை ஆகியவற்றை வழங்கிய பிறகும் அவன் தனது ஈமானையும் இஸ்லாத்தையும் பாதுகாத்து கொண்டவனாக, அல்லாஹ்வுடைய பாதையில் இருந்து திரும்பி விடாமல் தொடர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்பவனாகவும், அவனுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகளை எண்ணி பெருமையில்லாமல் பணிவோடு நடப்பதன் மூலமாகவும் தான் அது அவனுக்கு அருட்கொடையாக கொள்ளப்படும்.
மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட அந்த செல்வத்தில் உறவுகளையும், ஏழைகளையும், அனாதைகளையும் வழிப்போக்கர்களையும், சேர்த்துக்கொண்டு அந்த செல்வத்திற்குரிய ஹக்கை அறிந்து கொண்டால், அந்த செல்வம் கிடைத்த பிறகும் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக இருக்கும் போது அந்த செல்வம் அவனுக்கு சொர்க்கத்திற்கான காரணமாக அமைந்துவிடுகிறது
மக்கள், மனம் கவலையாக சஞ்சலமாக இருக்கும் போது அதற்கான ஒரு தீர்வை தேடி தனது கவலையை தான் மறக்க வேண்டுமே என்று பலர் பல்வேறு வழிகளை தேடுகின்றனர்; பல இடங்களுக்கு செல்கிறார்கள்; பல செயல்களை செய்கிறார்கள்; பல மனிதர்களிடத்தில் சென்று தனது மனவேதனைக்கு மருந்து கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கம், குர்ஆன், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நமது இத்தகைய பிரச்சனைக்கு ஒரு வழிகாட்டுதலை கொடுக்காமல் இருந்திருப்பார்களா? சிந்தியுங்கள்!.
அந்த வழிகாட்டுதலை அறிந்து அதன்படி ஒரு முஸ்லிம் தனது கவலையை போக்குவதற்கும் தனது சஞ்சலத்தை போக்குவதற்கும் முயற்சி செய்யவேண்டும். தனது மனம் அமைதி பெறுவதற்கான வழியை தேட வேண்டும்.
கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றால் அல்லாஹ் நம்முடன் இருக்கும் போது நாம் ஏன் சஞ்சலப்பட வேண்டும்? என்ற மனஉறுதி ஏற்பட வேண்டும். கவலைகளோ மன சஞ்சலங்களோ ஏற்படுவது இயற்கை தான். வரலாம்.
ஆனால் அந்த கவலைக்கு பிறகு நிராசையடைந்தவர்களாக பலவீனப்பட்டு, செய்வதறியாது திகைத்து அவன் பாதை மாறி விடக்கூடாது என்பதற்காகத்தான் குர்ஆன் வழிகாட்டுகிறது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71
ஒரு முஃமினுக்கு அவனுடைய ரப்பாகிய அல்லாஹ் கிடைத்திருப்பது கொண்டு, அவனுடைய திருப்பெயர்களை நினைவு கூறுவது கொண்டு, அவனுடைய திக்ருகளை செய்வது கொண்டு அவனுடைய வேதமாகிய அல்குர்ஆனை ஓதுவது கொண்டு, அவனுடைய நபியாகிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவது கொண்டு, ஓர் அடியானின் உள்ளத்திற்கு ஏற்படக் கூடிய மன அமைதி, மன நிம்மதி மனமகிழ்ச்சி அவனுடைய துக்கமும், சஞ்சலமும் அவனைவிட்டு களைவது இவையாவும் உலகத்தில் பல கோடிகளை செலவழித்தால் கூட முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கிடைக்கப் பெறாது.
அல்லாஹ் சுபஹானல்லாஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் எப்படி கூறுகிறான் பாருங்கள்;
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக. (அல்குர்ஆன் 13 : 28)
நீங்கள் தேடக்கூடிய மன நிம்மதி உங்களது செல்வத்தில் இருக்காது; உங்களது வசதிகளில் இருக்காது; உங்களது பதவியில் இருக்காது; நீங்கள் செல்லக்கூடிய சுற்றுலாத்தலங்களில் இருக்காது; இன்னும் எத்தனை பட்டியலை நீங்கள் வைத்திருக்கிறார்களோ அதில் எதிலேயும் நிம்மதி கிடைக்காது. அல்லாஹ்வுடைய திக்ரைத் தவிர. அவ்வளவு பெரிய சக்தியை அல்லாஹ் திக்ரில் வைத்திருக்கிறான்.
ரப்பு சொல்கிறான்; அல்லாஹ்வுடைய நினைவு ஒன்றில் மட்டும்தான் உள்ளங்கள் நிம்மதி அடைய முடியும்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ
அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். (அல்குர்ஆன் 29 : 45)
அன்பு சகோதர சகோதரிகளே!…
அல்லாஹ்வுடைய தன்மைகளைக் கொண்டு அல்லாஹ்வை யார் அறிந்தாரோ அவர்களுக்குத்தான் அவனை நினைவு கொள்வதில் உள்ள இனிமை புரியவரும்.
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் கை கால்கள் கட்டப்பட்டு நெருப்பு ஜுவாலைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வரும் பொழுது எவ்வளவு சாந்தமாக சொல்கிறார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: ” كَانَ آخِرَ قَوْلِ إِبْرَاهِيمَ حِينَ أُلْقِيَ فِي النَّارِ: حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ (صحيح البخاري4564 -)
نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் : 8
قُلْنَا يَانَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ
(அவ்வாறே அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) “நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!” என்று நாம் கூறினோம். அல்குர்ஆன் 21:69
அல்லாஹ்வுடைய பெயர் அவ்வளவு வலிமையானது. உள்ளத்தில் எவ்வளவு யகீன் உறுதி இருக்குமோ, அவ்வளவு நிம்மதியும் பாதுகாப்பும் அந்த அடியான் உணருவான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا
அவர் தனது தோழரிடம் கூறினார்; கவலைப்படாதீர்கள்; அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 9 : 40)
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்களா இல்லையா?
إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
அதற்கு (மூஸா) “அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்” என்றார். (அல்குர்ஆன் 26:62)
கடல் என்ன இன்னும் எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும் சரி, அந்த பிர்அவ்னை போன்று ஆயிரம் பிர்அவ்ன் வந்தால் என்ன? என்னோடு எனது ரப்பு இருக்கிறான் அவன் எனக்கு வழி காட்டுவான்.”
“இமாம் புகாரி, முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள்;
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو عِنْدَ الكَرْبِ يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَرَبُّ العَرْشِ العَظِيمِ» (صحيح البخاري6345 -)
அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன். மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி. அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி. பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6345.
எவ்வளவு மகத்தான வார்த்தைகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய, அல்லாஹ்வை கண்ணியப்படுத்தக்கூடிய, அல்லாஹ்வின் பக்கம் அவனை நெருக்கமாக்கக் கூடிய மிகப்பெரிய வார்த்தைதான் லா இலாஹ
இல்லல்லாஹ்.”
“கவலையின் போது ஓதும் துஆ
اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأْلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوْ اِسْتَاْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيْعَ قَلْبِيْ ، وَنُوْرَ صَدْرِيْ ، وَجَلاَءَ حُزْنِيْ وَذِهَابَ هَمِّيْ وَغَمِّيْ
(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி எதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஹ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ)
பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண், ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையிலே இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதிமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!”
“இந்த இடத்தில் நாம் ஒரு சம்பவத்தையும் அல்குர்ஆன் கூறக்கூடிய வரலாற்றையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)” என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21 : 87)
சகோதரர்களே! அந்த இக்கட்டான சூழ்நிலையில் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவு புலம்பல்களை புலம்பி இருக்கலாம். ஆனால் அவரோ அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தார். அந்த இக்கட்டான நிலைமையில் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களின் பிரார்த்தனையை ஏற்று உதவி செய்தான்.
யா அல்லாஹ்! உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. நீ பரிசுத்தமானவன்! நிச்சயமாக நானோ தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவர்களில் ஒருவனாக இருக்கிறேன்!
அவ்வளவுதான் சொன்னார்கள். அல்லாஹ் தஆலா அவரை மீன் வயிற்றில் இருந்து காப்பாற்றினான். காப்பாற்றியது மட்டுமில்லை இப்படித்தான் நாம் உங்களையும் காப்பாற்றுவோம்! என்றும் சொல்கிறான்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே ஒதுங்கிவிடக் கூடியவர்கள், தங்கள் தவறுகளை நினைத்து வருத்தப்பட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கக் கூடியவர்கள் இவர்களை அல்லாஹ் கண்டிப்பாக பாதுகாப்பேன் என்று
கூறுகிறான்.”

“அன்பு சகோதரர்களே! இமாம் அபூதாவுத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ் மூலமாக ஹதீஸை பதிவு செய்கிறார்கள்;
عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكِ كَلِمَاتٍ تَقُولِينَهُنَّ عِنْدَ الْكَرْبِ – أَوْ فِي الْكَرْبِ -؟ أَللَّهُ أَللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا»ٍ» (سنن أبي داود1525 -) ]حكم الألباني] : صحيح
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ் அவர்களுக்கு சொல்கிறார்கள்; உனக்கு கவலைகளும் மனசஞ்சலங்கள் கஷ்டங்களும் ஏற்படும்போது, الْكَرْبِ -கர்ப் என்றால் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்திற்க்கு சொல்லப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் நீ சொல்லக் கூடிய ஒரு துஆவை நான் உனக்கு சொல்லித் தரட்டுமா? என்று கேட்டார்கள்.
أَللَّهُ أَللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
அல்லாஹ்! அல்லாஹ்வே! என் இரட்சகன் அவனுக்கு எதையும் நான் இணையாக்கமாட்டேன். அல்லாஹ் மட்டுமே எனது இறைவன். எனது ரப்புக்கு நான் எதையும் யாரையும் இணையாக மாட்டேன்.
இதை சொல்லிக் கொண்டே இரு. அல்லாஹுத்தஆலா உன் கவலையைப் போக்கி விடுவான்.
நூல் : அபூதாவூது, எண் :1525.
மனநிம்மதியை வேண்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தேவையில்லை. ஆயிரக்கணக்கான பணங்களை செலவழித்து மனமகிழ்ச்சியை வாங்க வேண்டிய அவசியமில்லை. மன நிம்மதியை தேடி இங்கும் அங்கும் ஓட தேவையில்லை. இந்த துஆவை மட்டும் நாம் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்”
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
“யாராவது (அல்லாஹ்விடம்) தொடர்ந்து மன்னிப்புக் கோரினால், அல்லாஹ் அவருக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் ஒரு வழியையும், ஒவ்வொரு கவலையிலிருந்தும் நிவாரணத்தையும் ஏற்படுத்துவான், மேலும் அவர் எண்ணிப் பார்க்காத இடத்திலிருந்து அவருக்கு அல்லாஹ் உணவளிப்பான். எதிர்பார்க்கவில்லை.” [அபு தாவூத்].
எனவே நாம் அல்லாஹ்விடம் அதிகமாக தவ்பா செய்தாலே நம்முடைய அனைத்து கவலைகளும் தீர்ந்து விடும்..
“அல்லாஹ்வை கொண்டு ஆறுதல் பெற்றவர்களாகவும் அல்லாஹ்வுடைய திக்ருகளைக் கொண்டு, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை கொண்டு, அல்லாஹ்வை நினைவு கூறுவதை கொண்டு மன மகிழ்ச்சியையும் மன நிறைவையும் மன ஆறுதலையும் பெறக் கூடியவர்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி வைப்பானாக!
குர்ஆனை ஓதி, அல்லாஹ்வை நினைவு கூறி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றி அல்லாஹ்விடத்தில் உதவி தேடுபவர்களாக உங்களையும் என்னையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!
ஆமீன்”…