அண்ணலாரின் அரசியல்

அரசியல்

இஸ்லாம் என்பது மதம் அல்ல; அது ஒரு மார்க்கம். வாழ்க்கை வழிகாட்டி, மதத்திற்கும் மார்க்கத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.


ஆராதனைகள், வணக்க வழிபாடுகளைக் குறித்து மட்டுமே மதம் பேசும். ஆனால் மார்க்கமோ அதையும் தாண்டி வாழ்க்கைத் திட்டத்தைக் குறித்துப் பேசும். ஆகவே இஸ்லாம் அரசியலைக் குறித்தும் பேசும். பேசியே தீர வேண்டும். இல்லையேல் அது முழு வாழ்க்கைக்குமான வழிகாட்டியாக இருக்காது.

நாம் ஏன் அரசியலை வெறுக்கின்றோம்?


மதமும் வகுப்புவாதமும் கலக்கும் போது மோசமான அரசியல் உருவாகின்றது. ஆகவே தான் அரசியல் ஒரு சாக்கடை என்று நாம் ஒதுக்கி விடுகின்றோம். ஆனால், அரசியலில் ஆன்மீகம் கலக்கும் போது அது நல்ல அரசியலாக, அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கொண்டுவந்த அரசியலாக மாறுகின்றது. ஆன்மீக மணம் வீசுகின்றது.


அண்ணலாரின் அரசியல் என்பது ஜாதி அரசியலாகவோ, இனத்தின் அரசியலாகவோ குடும்ப அரசியலாகவோ இருக்கவில்லை. மாறாக அது கொள்கை சார்ந்த அரசியலாக இருந்தது.

நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏன் அரசியலை விரும்பினார்கள்?


நீதி மிக்க ஒரு சமுதாயத்தை கட்டமைப்பதற் காகவே அன்றி வேறில்லை. எந்த சமுதாயம் நீதியில் தவறுகிறதோ அங்கு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால் அதுவர்க்கப் போராட்டமாக மாறும். விளைவு…. வயிறு புடைத்தவன் தரமாட்டான். வயிறு பசித்தவன் விடமாட்டான்
எனும் போராட்டம்அங்குஆரம்பிக்கும்.


நீதி இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும். அமைதி மிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதே இஸ்லாத்தின் நோக்கம். ஆகவே தான் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அரசியலை விரும்பினார்கள்.


நீதியும் அமைதியும் மிக்க சமூகம் உருவாக வேண்டுமெனில் அதிகாரம் தேவை. அந்த அதிகாரமே அரசியல் என்று பெயர் மாற்றம் பெறுகின்றது.



பிரச்சாரம், உபதேசத்தின் மூலம் எத்தனை நபர்களை நம்மால் திருத்த முடியும் கூறுங்கள்…? மக்காவில் 13 வருட காலம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொடர்ந்து உபதேசமும் அழைப்புப் பணியும் செய்யவில்லையா?

எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள். எத்தனை பேர் திருந்தினார்கள்?

வெகு சிலர் தான் இல்லையா…?

அதே வேளை மதீனாவில் அதிகாரம் கைகளுக்கு வந்தபின் வெறும் 10 வருட காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை யோசித்துப் பாருங்கள். உத்தரவுகள் ஒவ்வொன்றாகப் போடப்பட்டன. அத்தனை உத்தரவுகளும் அடிபிறழாமல் பின்பற்றப்பட்டன.


ஏன் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அரசியலை விரும்பினார்கள் என்பதை சுருக்கமாக இவ்வாறு கூறலாம். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இடங்களில் என்னதான் இறையச்சம் இருந்தாலும் ஒருவர்நினைத்தால் தவறு செய்யலாம். யாரும் தட்டிக் கேட்க முடியாது. அதே வேளை இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் போது நினைத்தாலும் தவறு செய்ய ஏனெனில் ஒவ்வான்றுக்கும்
முடியாது.


தண்டனைகள் உடனடியாகக் காத்திருக்கும்.
ஆகவே தான் ஹிஜ்ரத் புறப்படும் போது அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமே இவ்வாறு பிரார்த்தனை புரியுமாறு இறைவன் ஆணை பிறப்பிக்கின்றான் : “மேலும் பிரார்த்தனை புரிவீராக! என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டுச் செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து
எனக்குப் பக்கபலமாகஓர் அதிகாரத்தைவழங்குவாயாக!”
(அல்குர்ஆன் 17:80)


திருக்குர்ஆன் விரிவுரையாளர் கதாதா (ரஹ்), இந்த இறைவசனத்துக்கு இவ்வாறு விளக்கம் கூறுகிறார் : இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டுமெனில் ஓர் அதிகாரம் இல்லாமல் முடியாது என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெகுத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார்கள். ஆகவேதான் பக்கபலமாக ஓர் அதிகாரத்தைத் தா என்று இறைவனிடம் கேட்கின்றார்கள். அதுதான் அரசியல் பலம். (இப்னு கஸீரி


அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனைத்துக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் கூறுகின்றான். எனில், அரசியலுக்கும் முன்மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? இல்லையேல் அரசியலுக்கு நாம் வேறு யாரையாவது அல்லவா முன்னுதாரணமாகத் தேட வேண்டி வரும்?


அண்ணலாரின் அரசியல் விதிகள்


அரசியல் நாகரீகம் என்றால் என்னவென்று உலகமே அறிந்திராத வேளையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆன்மீகமே என்று அரசியலும் உரக்க முழங்கியதோடு மட்டுமல்ல; அரசியல் குறித்து
அகிலம் அறிந்திராத புரட்சி விதிகளை உருவாக்கி உபதேசித்தார்கள்.


1.அதிகார மோகம் கூடாது


அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி

வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : “விரைவில் நீங்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது மோகம் கொள்வீர்கள்! அதன் ஆரம்பம்சாபமாக இருக்கின்றது. அதன் அடுத்த கட்டமோ கைசேதமாக இருக்கின்றது. இறுதியில் மறுமை நாளில் பெரும் வேதனைக்கும் அது வழி வகுக்கும்! நீதியுடன் நடந்து கொள்பவர்களைத் தவிர.” (புகாரி)

அதிகாரத்தின் மூலம் பணம், பதவி, பகட்டு என்று பாதை மாறும் போது அது சாபத்திற்கு உரியதாக மாறுகிறது.


கேட்பவர்களுக்கு பதவி கிடையாது என்பதும் அண்ணலாரின் அரசியல் கொள்கையே. அதனால்தான் இறையச்சத்தில் மிகச்சிறந்த மாபெரும் நபித்தோழர் அபூதர் (ரலி), அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தமக்கு ஒரு பொறுப்பு தருமாறு விண்ணப்பித்த போது, “நீர் பலவீனமானவர், உமக்கு அது வேண்டாம்” என்று கூறி மறுத்து விட்டார்கள்.


உங்கள் தேவையே எங்கள் சேவை என்றெல்லாம் பசப்பு வார்த்தை கூறி, பல்லாயிரம் வாக்குறுதிகளை காற்றில் அள்ளி வீசி, ஒரு கவுன்சிலர் பதவியையாவது அடைந்து விட மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் அதிமோகம் கொண்ட ஆணவ வர்க்கத்திற்கு, பெருமானாரின் சம்மட்டி அடி இது.


அந்த கவுன்சிலர் பதவிக்கும் நடக்கும் போட்டிகள் செலவிடப்படும் பணம்…இவற்றைக் கண்ணுறும்போது ஒன்று மிகத்தெளிவாகத் தெரிகின்றது. இது மக்களுக்குச் சேவை செய்வதற்கல்ல… மாறாக மக்களை மொட்டை அடிப்பதற்கே! இன்றைய அரசியல்வாதிகளும் மறைமுகமாக அதனை ஒத்துக் கொள்கிறார்கள்.

2 ஆடம்பரம், பந்தா, பகட்டு கூடாது


முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டின் ஆளுராக அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுப்பி வைத்த போது இவ்வாறு உபதேசித்தார்கள் : “முஆத்! ஆடம்பரத்தைக்குறித்து உம்மைநான்எச்சரிக்கிறேன்! அல்லாஹ்வின் நல்லடியார்கள்
ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள்.”


ஆம் ஆத்மி கட்சி குறித்தும், அரவிந்த் கேஜ்ரிவால் குறித்தும் இந்தியாவின் மூலை முடுக்குகளில் கூட இன்று ஓயாமல் பேசப்படு கின்றதே ஏன்? வேறுபட்ட ஓர் அரசியலை அவர் மக்களுக்கு அறிமுகம் செய்ததால்தான். ஆடம்பரம் வேண்டாம் என்கிறார். சுழல் விளக்கு வாகனம் வேண்டாம் என்கிறார். பாதுகாப்புக் காவலர்கள் வேண்டாம் என்கிறார். ஐந்து படுக்கையறை கொண்ட பங்களா வேண்டாம் என்கிறார்.


மக்களும் வித்தியாசமான ஓர் அரசியல் வாதியை, டைனசோரைப் பார்ப்பது போன்று வாய் பிளந்து பார்க்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் இஸ்லாம் கூறிய பண்பாட்டு அரசியல் என்பது நம்மவர்களுக்கும் புரிவதில்லை.


மக்கா, மதீனாவின் ஆட்சியதிகாரம் கரங்களுக்குள் இருந்த பின்பும் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எவ்வாறு பணிவுடன் நடந்து கொண்டார்கள் என்பது குறித்து குதாமா (ரலி) அறிவிக்கின்றார் கள் : (துல்ஹஜ் பிறை 10ஆம் நாளான) குர்பானி கொடுக்கும் நாளில் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் ஒட்டகத்தில் சவாரி செய்தவாறு ஜம்ராவில் கல்லெறிபவர்களாய்க் கண்டேன். அச்சந்தர்ப்பத்தில் அங்கு அடிதடியோ, அதட்டலோ, விரட்டலோ, விலகிச் செல்லுங்கள் எனும் சப்தமோ எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.

(மிஷ்காதி

ஓர் அதிகாரி எப்படி இருக்க வேண்டும்?

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :”முஸ்லிம்களின் விவகாரங்களுக்குப் பொறுப் பேற்றுக் கொண்ட ஓர் அதிகாரி, பிறகு தனக்காக எவ்வித நலன் நாடுகின்றாரோ, எப்படி உடல் வருத்தி உழைக்கின்றாரோ, அப்படி மற்ற முஸ்லிம்களுக்காகவும் செய்யவில்லையெனில் அல்லாஹ் அவரை நரகத்தில் தலைகுப்புற வீழ்த்தி விடுவான்.’ (தப்ரானி


பிறிதொரு தடவை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டார்கள் : “எந்த மனிதர் என் சமுதாய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, பின்னர், அவர்களை கவலைகளிலும் துன்பங் களிலும் மூழ்கடிக்கிறாரோ அந்த மனிதரின் வாழ்க்கையை இறைவா! நீயும் நெருக்கடிக்குள் ளாக்குவாயாக! எந்த மனிதர் சமுதாய விவகாரங் களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, பின்னர் மக்களிடம் பாசத்துடனும் பரிவுடனும் நடந்து கொண்டாரோ அவரின் மீது இறைவா! நீயும் கருணை புரிவாயாக!” (முஸ்லிம்)


ஓர் அதிகாரி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், இன்றைய நமது விவகாரங் களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரிகள் எவ்வாறு இருக்கின்றார்கள் என்பதையும் இந்த இரு நபிமொழிகளும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

4 லஞ்சத்தின் குறுக்கு வழிகள் அடைப்பு


அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “எந்த சமுதாயத்தில் லஞ்சம் பெருகி விடுகிறதோ அந்தச் சமுதாயத்தில் அச்சமும் பீதியும் சூழ்ந்தே தீரும்” (அஹ்மத் என்று நெஞ்சம் நிமிர்த்தி லஞ்சம் தவிர் என்றார்கள் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
ஒருவருக்குப் பரிந்துரை செய்த காரணத்தால் கிடைக்கும் பரிசும் வட்டியின் வாசலைத் திறந்துவிடும் என்று அன்றே எச்சரித்தார்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).


“ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்காகப் பரிந்துரை செய்யும் போது ( எவருக்காக பரிந்துரைசெய்யப்பட்டதோ) அவர், அதற்காக ஏதேனும் பொருளை அவருக்குக் கொடுக்க, அவரும் அதை ஏற்றுக் கொண்டால் அவர், வட்டியின் வாயில்களில் ஒரு பெரிய வாயிலில் நுழைந்தவராவார்.”
(அபூதாவூதி)


”மோசடியில் ஈடுபடாதே” (நஸயீ) என்றார்கள். “தானியத்தைப் பதுக்கி வைக்கிறவன் குற்றவாளியாவான்” (முஸ்லிம்) என்று கூறி பதுக்கலுக்குத் தடை விதித்தார்கள். “ஏமாற்று வேலையில் ஈடுபடாதே” (நஸயீ) என்றார்கள். “இன மற்றும் குல ரீதியான மாச்சரியங்கள் கூடாது” (அதபுல் முஃப்ரத்) என்றார்கள். “வகுப்பு வேறுபாடு கொள்ளல் கூடாது” (புகாரீ, முஸ்லிம்) என்றார்கள்.


இவ்வாறு தூய்மையான அரசியலுக்கான எண்ணற்ற விதிமுறைகளை அரசியல் சாசனமாக அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லிச் சென்றார்கள். அவற்றை இங்கே விவரிக்க நேரமும் இடம் தராது, காலமும் பொறுமைகாக்காது.

அரசியல்


ஓர் அரசியல் தலைவராக எவ்வாறு அண்ணலார் விளங்கினார்கள்?

வெறுமனே விதிமுறைகளையும்சட்ட திட்டங்களையும் மட்டும் கூறிவிட்டு வாழா விருக்கவில்லை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். மாறாக சொன்னபடி மிகச் சிறந்த தலைவராக வாழ்ந்து காட்டினார்கள்.


ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும்? தலைவனுக்கான தகுதிகள் என்னென்ன…? என்று நோக்கினால், பன்முக ஆளுமை கொண்டவராக அருமை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். இறைத் தூதராக, சட்டம் இயற்றும் அதிகாரியாக, தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக, போர்ப்படைத் தளபதியாக, தலைசிறந்த வழிகாட்டியாக, தோழர்களின் ஆலோசனையை ஏற்பவராக. மதிநுட்பம் மிக்கவராக, எதிர்காலம் குறித்த இலட்சியம் கொண்டவராக, இறை சட்டத்தை அணுவும் பிசகாமல் பின்பற்றும் இறைத்தூதராக… என்று
பன்முக ஆளுமை கொண்ட ஒரு தலைவராக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பரிணமித்துள்ளார்கள்.


ஆனால், நாம்…? அநேகமாக வணக்க வழிபாடுகளில் மட்டுமே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி, மற்ற விவகாரங்களில் எவர் எவரையெல்லாமோ பின்பற்றுகிறோம்.



தலைவருக்கானமுதல்தகுதி…
எதிர்காலம் குறித்த லட்சியம்


ஒரு தலைவருக்கான முதல் தகுதியே எதிர்காலத் திட்டம்தான். தான் தலைமை வகிக்கும் ஸ்தாபனம் அல்லது சமூகம் 10 வருடம் அல்லது 20 வருடத்திற்குப் பின் எங்கு சென்று சேர வேண்டும்? 25 வருடங்களுக்குப் பின் எனது தலைமையில் இந்த சமூகம் அல்லதுஎன்ன ஸ்தாபனம் வளர்ச்சியை, மாற்றத்தை அடைய வேண்டும் எனும் லட்சியம்தான் தலைவருக்கான முதல் தகுதி.



ஒரு ஜப்பானிய கம்பெனியிடம் 250 வருட எதிர்காலத்திட்டம் இருக்கும். அதாவது 250 வருடம் சென்றபின் இந்த ஸ்தாபனம் எங்கு சென்று சேர வேண்டும்; அதன் லட்சியம் என்ன என்று ஆரம்பத்திலேயே திட்டம் தீட்டுவார்களாம். ஆனால், முஸ்லிம்களாகிய நாம்… அப்பா இறந்தபின் அவருடைய கடையை உனக்கா எனக்கா என்று சண்டை போட்டு, ஆளுக்கொரு கதவு, ஆனவரை லாபம் என்று பங்கு பிரித்துக் கொள்கிறோம்.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். ஆம்… ‘ஹைபர் டென்சன்’ என்று கூறப்படும். மிகவும் நெருக்கடியான நேரத்தில்கூட இந்த சமூகத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற திட்டமிடல் நபிகளாரிடம் இருந்தது.


ஹிஜ்ரத்தின் போது அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பாலையில் அச்சத்துடன் மதீனாவை நோக்கி நடந்து செல்கின்றார்கள் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்). அந்நேரம்சுராகா இப்னு மாலிக் என்பவர் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி அவர்களைக் கண்டுபிடித்து விடுகிறார். உயிருடனோ பிணமாகவோ பிடித்து வந்தால் சிகப்பு ஒட்டகங்கள் கிடைக்கும் என்ற ஆசையில் அண்ணலாரை நெருங்கியவர், அது இயலாமல் ஆன போது நபிகளாரிடம் பாதுகாப்புக் கோருகின்றார்.


அப்போது சுராகா என்ற அந்த குதிரை வீரரிடம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா?… “சுராகா…! பாரசீக மன்னர் கிஸ்ரா வின் அணிகலன்களை அணிந்தால் நீர் எப்படி இருப்பீர்…? உமது தோற்றம் எப்படி இருக்கும்…?”


சுராகா கேட்டார் : “கிஸ்ரா என்றால் பாரசீக மன்னரையா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?”. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : “ஆம்! இஸ்லாம் பாரசீகத்தை அடையும். அதன் அணிகலன்களை நீர் அணிந்து கொள்வீர்.”


20 வருடத்திற்குப் பின் இஸ்லாம் எங்கு சென்று சேர வேண்டும் என்ற அண்ணலாருடைய எதிர்காலத் திட்டம் ஹிஜ்ரத்தின் போதே துவங்கி விட்டது. மிகச்சரியாக 20 வருட காலத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் காதிஸிய்யா என்ற போரில் பாரசீகம் வெற்றி கொள்ளப்படுகிறது. மஸ்ஜிதுந் நபவியில் வைத்து சுராகாவிற்கு அந்த அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது.



இந்த வரலாற்றைப் படிக்கும் நாம் என்ன நினைக்கிறோம்…?
அதுஅண்ணலார்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மகத்துவம். மறைவான ஞானம் நபிகளாருக்கு இருந்தது. ஆகவேதான் அப்போது அவ்வாறு கூறினார்கள் என்று இந்நிகழ்வை ஒரு புனிதமாகக் கருதி, இதற்கும் நமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று ஒதுக்கி விடுகிறோம்.


இதனால் ஏற்பட்ட பின்னடைவு என்ன வென்றால், இந்த வெற்றியை ஈட்டுவதற்கும்,
லட்சியத்தை அடைவதற்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பட்ட துன்பங்கள் என்ன, துயரங்கள் என்ன, சிரமங்கள் என்ன, திட்டங்கள் என்ன என்று எதுவும் நமது கண்களுக்குத் தென்படாமலேயே சென்று விடுகின்றது.

சுற்றி நடப்பவை குறித்த அறிவு

ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய இரண்டாவது தகுதி இது. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் வெற்றித் தலைவராக திகழ முடியாது. உலகில் நம்மைச் சுற்றி என்ன எங்கே நடக்கிறது? நாம் இருக்கின்றோம்? என்பனவற்றை அறிந்திருப்பது ஒரு தலைமைக்கு மிகமிக அவசியம்.


அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார்கள். ஆரம்பப் புலம் பெயர்தல் என்று அழைக்கப்படும் முதல் ஹிஜ்ரத் அபிஸீனிய தேசத்தை நோக்கி நடைபெற்றது. மக்காவில் சோதனை அனுபவித்த தோழர்களிடம் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : “அபீஸீனியா வுக்கு ஹிஜ்ரத் புறப்படுங்கள். அங்கு ஓர் அரசர் இருக்கின்றார். அவர் நீதி தவறாதவர். அடைக்கலம் கேட்டு வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மிகச் சிறந்த அரசர்.”


ஏன்
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது தோழர் களிடம் எகிப்துக்கோ இந்தியாவுக்கோ செல்லுமாறு கூறவில்லை? அங்கிருக்கும் நஜ்ஜாஷி மன்னர் நீதி தவறாதவர் என்ற செய்தி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எவ்வாறு தெரிந்தது?


சுற்றி நடப்பது குறித்தும், உலகின் நிலவரம் குறித்தும் ஒரு தலைவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த விஷயத்தில் நிகரற்ற தலைவராக இருந்தார்கள்

ஆகவே தான் இரண்டாவது ஹிஜ்ரத்தை மதீனாவை நோக்கி அமைத்துக் கொண்டார்கள்.


ஏன் தாயிபுக்குச் செல்லவில்லை…? ஏன் எகிப்துக்குச் செல்ல வில்லை…? இது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் இன்றைய அரசியல் தலைவர்களுக்கான அரசியல் அரிச்சுவடியாகவே திகழ்கின்றது. விரிவஞ்சி அவற்றைத் தவிர்ந்து கொள்கிறோம்.


மதிநுட்பம், புத்திசாலித்தனம், சாணக்கியம்


ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய மற்றுமோர் முக்கிய தகுதி இது. மதிநுட்பமும் புத்திசாலித்தனமும், இல்லையேல் தோல்விதான் பரிசாகக் கிடைக்கும்.


அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மதிநுட்பம் நம்மை வியக்க வைக்கும். பத்ருப் போர் நடைபெறுவதற்கு முன், எதிரிகளின் எண்ணிக்கையை வேவு பார்ப்பதற்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு நபித்தோழரை அனுப்பினார்கள். திரும்பி வந்தவர், எதிரிகள் 100 பேர் இருக்கலாம் என்றார். பெருமானாருக்கு சந்தேகம் வலுத்தது. யாரும் எதிர்பாராத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார்கள்: “எத்தனை ஒட்டகங்கள் தினமும் அறுக்கப்படுகின்றன?” அவர் கூறினார் : “9 முதல் 10 ஒட்டகங்கள்.” உடனே கூடியிருந்தவர்களிடம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : ”அவ்வாறெனில் அறிந்து கொள்ளுங்கள், எதிரிகள் 900 முதல் 1000 வரை இருக்க வேண்டும். ஏனெனில் ஓர் ஒட்டகத்தை 90 முதல் 100 பேர் வரை சாப்பிடுவார்கள்.”


எதிரிகள் குறித்த மிகச்சரியான கணிப்பு. வித்தியாசமான கேள்வி மூலம் தனது மதி நுட்பத்தை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இங்கே
வெளிப்படுத்துகின்றார்கள்.


உஹத் போர் – முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போர். ஒரு வகையில்
எதிரிகளுக்கு வெற்றி என்றுகூட சொல்லலாம். உஹத் போர் முடிந்த மூன்றாம் நாள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உஹத் போரில் கலந்து கொண்ட தோழர்களை மட்டும் அழைத்து இவ்வாறு கூறினார்கள்: “உஹத் போரில் கலந்து கொண்டவர்கள் மட்டும் இங்கே நில்லுங்கள். மற்றவர்கள் திரும்பி விடுங்கள். மக்காவை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் குறைஷிப் படையை நாம் விரட்டிச் சென்று தாக்க இருக்கின்றோம்.”


என்ன இது? வெற்றி கொண்ட ஒரு படையை, பேரிழப்புக்கு ஆளான படை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தும் நிகழ்வு உலக வரலாற்றில் எங்காவது உண்டா…? ஏன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள். இந்நிகழ்வுக்கு ‘ஹம்ராவுல் அஸத் போர்’ என்று வரலாறு பெயர் சூட்டியுள்ளது.


ஏன் தெரியுமா…? உஹதில் முஸ்லிம் களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இழப்பு ஆகியவை மதீனாவைச் சுற்றி இருந்த யூதக் கோத்திரத்தி னரிடம் ஒரு வகையான அச்சமின்மையை தோற்றுவித்தது. முஸ்லிம்களை கருவறுக்க எப்போது சந்தர்ப்பம் வரும் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம். எனவே உடனடியாக முஸ்லிம்களை அடியோடு இல்லாமல் ஆக்க தங்கள் படைகளைத் தயார் செய்தனர். இச்செய்தி அறிந்த போதுதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ஹம்ராவுல் அஸத்’ தாக்குதலுக்கான அழைப்பை விடுத்தார்கள்.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தோழர்களும் விரட்டி வருகின்றார்கள் என்ற செய்தி அறிந்த குறைஷிகள் மக்காவை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடியது, அச்செய்தியை அறிந்த யூதர்கள் தங்களது வாலைச் சுருட்டிக் கொண்டது ஆகியவற்றை வரலாறு பக்கம் பக்கமாக பதிவு செய்து வைத்துள்ளது. படித்தால்புரியும் அண்ணலாரின் மதிநுட்பம் எவ்வாறு இருந்தது என்று.


எடுக்கும் முடிவில் உறுதி


ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய இன்னொரு தகைமை இது. முடிவு எடுக்குமுன் ஆலோசனையின்போதுஎன்ன வேண்டுமென்றாலும் பேசலாம், விவாதிக்கலாம். ஏன் சண்டை கூடப் போடலாம்.ஆனால், முடிவுஎடுத்துவிட்டால் அதிலிருந்து பின் வாங்குவது ஒரு தலைவருக்கு அழகல்ல. உறுதியுடன் அதனைச் செயல்படுத்துவார்.


உஹத் போர் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கின்றது. மதீனாவுக்கு வெளியே சென்று போரிட வேண்டும் என்று இளைஞர்கள் கூறினர். முதியவர்களும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் மதீனாவிற்கு உள்ளே இருந்து கொண்டே போரிடலாம் என்ற கருத்தை முன் வைத்தனர். பெரும்பான்மையோரின் கருத்து மதீனாவுக்கு வெளியே செல்வது என்றிருந்தால், அவ்வாறே முடிவு செய்யப்பட்டது. பெருமானாரும் போருக்குத் தயார் ஆவதற்காக கூடாரத்திற்கு உள்ளே சென்றார்கள்.


அப்போது சில இளைஞர்களின் மனதில் அண்ணலாரின் கருத்துக்கு மாற்றமாக நாம் கருத்து சொல்லி விட்டோமோ என்ற கவலை. வெளியே வந்த பெருமானாரிடமே அதனைத் தெரிவித்தனர். “அல்லாஹ்வின்தூதரே! நாங்கள் உங்களைநிர்பந்தம்
செய்துவிட்டோமோ… வேண்டுமெனில் நாம் மதீனாவுக்கு உள்ளேயே இருந்து போரிடலாம்” என்றனர்.

அதற்கு அண்ணலாரின் பதில் என்னவாக இருந்தது தெரியுமா? “இறைவனின் தூதர் போருக்கான கவச உடையை அணிந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதருக்கும் அவரது எதிரிகளுக்கும் இடையே வெற்றி அல்லது தோல்வி என்று முடிவு காணாத வரை கவச உடையைக் கழற்றும் பேச்சுக்கே இடமில்லைஆம். முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்கும் பழக்கம் தலைவருக்கு அழகல்ல.

வீரம், தைரியம்
.
கோழை ஒரு நாளும் தலைவனாக முடியாது. அஞ்சா நெஞ்சன் என்று புகழப்படும் எத்தனையோ தளபதிகள் போர் முனையில் புற முதுகு காட்டி ஓடியுள்ளனர். போர்க்களத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் எத்தனையோ வீரர்கள் இருளில் தனிமையில் கோழைகளாக இருந்துள்ளனர்.


குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள், குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள் என்பது தமிழ் பழஞ்சொல். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு போதும் அவ்வாறு இருந்ததில்லை.

கஅபாவில் தவாஃப் செய்து கொண்டி ருந்தார்கள் நபிகளார். நபிகளாரைச் சுற்றி நின்று குறைஷித் தலைவைர்கள் கேலியும் கிண்டலும் பேசி உரக்கச் சிரித்து எக்காளமாக எள்ளி நகையாடிக் கொண்டிருந்தனர். நபிகளாரோ தனி மனிதராக… குறைஷிகளோ கூட்டமாக.
தவாஃபை முடித்த நபிகளார் நேராக குறைஷிகள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். வந்தவர் கோபமாக இவ்வாறு கூறினார்கள் : ‘குறைஷிகளே…! உங்களுக்கு நாசம்! உங்களுக்கு நான் மரணத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்… எச்சரிக்கை!”


அவ்வளவுதான்! அங்கிருந்த ஒட்டுமொத்த குறைஷிகளும் பயத்தால் அண்ணலாரின் கரத்தைப் பிடித்தவர்களாக பெருமானாரை தாஜா செய்யத் துவங்கி விட்டனர்.


தான் ஒரு தனி மனிதர் என்பதையோ குறைஷிகள் கூட்டமாக இருக்கின்றனர் என்பதையோ ஒரு பொருட்டாக எடுக்க வில்லை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். வீரத்துடன் தைரியமாகஇங்கே செயல்பட்டார்கள். ஒரு தலைவன்இவ்வாறுதான் இருக்க வேண்டும்.

அலீ (ரலி) கூறுகின்றார் : போர்க்களத்தில் உச்சக்கட்ட வேளையில் உறுதியுடன் நிலைத்து நின்று போர் புரிய வேண்டும் என்று நாங்கள் விரும்பினால், அண்ணலாரின் அருகே சென்று நின்று கொள்வோம்.


ஒரு வீரமிக்க தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும்
என்பதற்கானபண்புஇதுதான்.
தலைமையின் தகைமையும் இதுதான்


இவ்வாறுஅண்ணலாரின்அரசியல்பன்முகம் குறித்து
சொல்லிக்கொண்டேஇருக்கலாம்.

ஆயினும் நமது கடமை என்ன?


மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்கலாமே. ஆம்! நாற்றமெடுக்கும் சாக்கடை என்று ஒதுங்கு வதால் லாபம் அடைவது யார்? மென்மேலும் நஷ்டம் அடைவது யார்? யோசித்துப் பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் சமூகப் பிரச்சனைகளி லாவது நாம் ஈடுபடலாமே. அதுதானே அண்ணலாரின் அரசியல் பாடம்.


தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்வது ஓர் உண்மை முஸ்லிமுக்கு அழகா…? யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நான் மட்டும் சுகமாக வாழ்ந்தால் போதும் என்பது இஸ்லாம் வகுத்தளித்த பண்பாடாக இருக்க முடியுமா? சிந்திப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *